ஜால்ரா சங்கங்களிடமே கருத்து அமைச்சர் மீது விவசாயிகள் காட்டம்
ஜால்ரா சங்கங்களிடமே கருத்து அமைச்சர் மீது விவசாயிகள் காட்டம்
ADDED : பிப் 17, 2025 04:18 AM
சென்னை: 'தி.மு.க., ஆதரவு போலி சங்கங்களை வைத்து, வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி குற்றஞ்சாட்டிஉள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார்.
ஆனால், இதுவரை நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டங்களில், விவசாயிகள் தெரிவித்த கருத்துகள், பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
விவசாயிகளோடு களத்தில் இருந்து போராடக்கூடிய, அவர்கள் சிரமங்களை அறிந்த விவசாய சங்கத் தலைவர்களை அழைத்து பேசி, பட்ஜெட் அறிக்கையை வடிவமைக்காததே இதற்கு காரணம்.
'லெட்டர் பேடு' விவசாய சங்க தலைவர்களையும், ஜால்ரா கூட்டங்களையும் வைத்து, மக்கள் வரிப்பணத்தில், அரசின் பெயரில் போலியான கருத்து கேட்பு கூட்டத்தை, கடந்த நான்கு ஆண்டுகளாக அமைச்சர் பன்னீர்செல்வம் நடத்தி வருகிறார்.
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம், கடந்த 14ம் தேதி கும்பகோணத்தில் நடந்தது.
இதில், தி.மு.க., மற்றும் அமைச்சர் ஆதரவு பெற்ற கைக்கூலிகளும், போலி விவசாய சங்கத் தலைவர்களும் பங்கேற்று, கருத்து கேட்பு கூட்டத்தின் நோக்கத்தை அடியோடு சிதைத்து விட்டனர். தலைப்பிற்கு பொருத்தமான எந்த செயல்களும் அங்கு நடக்கவில்லை. ஒருசில விவசாய சங்கத் தலைவர்களை மட்டுமே நடுநிலையாக பேச வைத்தனர்.
தன் உறவினர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் வைத்து, கருத்து கேட்பு என்ற நாடகத்தை, அமைச்சர் சிறப்பாக நடத்தி உள்ளார். தேர்தலில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளில், 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.
விவசாயிகள் மத்தியில் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கு, அமைச்சர் தான் காரணம்.
இவரை வைத்துக்கொண்டு, 60 சதவீத விவசாயிகள் உள்ள தமிழகத்தில், 200 தொகுதிகளை மீண்டும் பிடிக்க, தி.மு.க., நினைத்தால், அது கனவாகவே முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.