கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை: சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை
கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை: சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 30, 2025 02:43 AM
சென்னை, ஜூன் 30-
பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதால், சாகுபடியில் இறங்கியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கி உள்ளது. குறுவை சாகுபடி தீவிரம் அடைந்தால், யூரியா, பொட்டாசியம், கூட்டு உரங்கள் தேவை அதிகரிக்கும்.
இந்நிலையில், கூட்டுறவு மற்றும் தனியார் உரக் கடைகளில், மூட்டைக்கு, 50 முதல் 100 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விதைகள் மற்றும் உரங்கள் விற்பனையை கண்காணிக்க, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள், சீனாவில் இருந்துதான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிற்கு உரங்களை அனுப்ப, சீனா கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், கரீப் பருவத்தில், உரங்கள் தேவை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், இப்போதே உரங்களை கூடுதல் விலைக்கு தனியார் கடைகளில் விற்கின்றனர்.
இதுகுறித்து புகாரில் உரக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், கூடுதல் விலைக்கு உரங்கள் விற்ற, 36 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.