/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வெட்டிக் கொல்லப்பட்ட தந்தை; விரக்தியில் மகள் தற்கொலை: போலீசார் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு
/
வெட்டிக் கொல்லப்பட்ட தந்தை; விரக்தியில் மகள் தற்கொலை: போலீசார் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு
வெட்டிக் கொல்லப்பட்ட தந்தை; விரக்தியில் மகள் தற்கொலை: போலீசார் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு
வெட்டிக் கொல்லப்பட்ட தந்தை; விரக்தியில் மகள் தற்கொலை: போலீசார் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு
ADDED : மார் 23, 2026 10:19 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தந்தையை கொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் விரக்தி அடைந்த மகள், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் 55. இவர் மார்ச் 16 வயலுக்கு செல்லும் வழியில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கொலையாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறிய நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
ஆறுமுகத்தின் மகள் பேபி கனி 23, திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் செவிலியராக பணிபுரிந்தார். தந்தை கொல்லப்பட்டதால் பேபி கனி மனவேதனையில் இருந்தார். தந்தை இறந்து 6 நாட்களே ஆன சூழலில் மகளும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன் பேபி கனி கடிதம் எழுதியுள்ளார். அதில், தந்தையை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும். தந்தையின் உடல் அருகே தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் விசாரணை என்ற பெயரில் தினமும் குடும்பத்தினரை அழைத்து தொந்தரவு செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், இதனால் தான் பேபி கனி தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இச்சம்பவத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

