ADDED : மார் 06, 2025 11:02 PM
சென்னை:'முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பதில், எவ்வித கவனமும் செலுத்தாமல், அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள். செங்கல்பட்டில் ஓடும் பஸ்சில், ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. பவானி அருகே சிறுமிக்கு, பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை.
பரமக்குடியில், பட்டப்பகலில் நடு ரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை. மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து. ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சி என்பது, யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி என்பதே, நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை.
தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பதில், எவ்வித கவனமும் செலுத்தாமல், அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. தினமும் அரங்கேறும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, எந்த பதிலும் சொல்லாமல், முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விஷயங்களை முன்னிலைப்படுத்தி, இதுபோன்ற சம்பவங்களை கடந்து விட முனைவது, தமிழகத்தின் மகளிருக்கு இழைக்கின்ற, மன்னிக்க முடியாத துரோகம். இது கடும் கண்டனத்துக்கு உரியது.
சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய, இந்த இரும்புக்கரத்தின் துருவை துடைத்தெறிந்து செயல்படுமாறு, 'போலி போட்டோஷூட் அப்பா'வை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.