பிப்ரவரி 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தேர்தல் அதிகாரி அறிவிப்பு
பிப்ரவரி 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தேர்தல் அதிகாரி அறிவிப்பு
ADDED : ஜன 31, 2026 08:44 PM

சென்னை: வரும் பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்காக, லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மட்டுமே இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் போது, பெயர் சேர்க்க மட்டும் 11 லட்சத்து 71 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி, முகவரி மாற்றம், பெயர் மற்றும் வயது திருத்தம் என மொத்தம் 34.75 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தகுதியில்லா அல்லது தவறான தகவல்களுடன் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்தவித தவறும் இல்லாமல் வாக்காளர் பட்டியலை துல்லியமாக தயாரிக்க வேண்டும் என்பதில் தேர்தல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அனைத்து விண்ணப்பங்களும் முழுமையாக பரிசீலிக்கப்பட்ட பிறகு, பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பட்டியல் வெளியான பின்னர், தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா? என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். . வாக்காளர் பட்டியல் துல்லியமாக தயாராகும் பட்சத்தில், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நம்பகமாகவும் இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

