தொகுதி பங்கீட்டை இறுதி செய்யுங்கள்: பழனிசாமிக்கு நிர்வாகிகள் நெருக்கடி
தொகுதி பங்கீட்டை இறுதி செய்யுங்கள்: பழனிசாமிக்கு நிர்வாகிகள் நெருக்கடி
ADDED : பிப் 08, 2026 07:36 AM

சென்னை: 'கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள், சிலர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், 170 தொகுதிகளுக்கு மேல், அ.தி.மு.க., போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, 10,000க்கும் அதிகமானோர், விருப்ப மனு வழங்கி, வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், தே.ஜ., கூட்டணிக்குள், தே.மு.தி.க., மற்றும் ராமதாஸை கொண்டு வர, பா.ஜ., மேலிடம் முயற்சி செய்கிறது. இதனால், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு, தொகுதி பங்கீட்டை இ றுதி செய்யவில்லை. இந்த தேர்தலில், நான்கு முனைப் போட்டி இருப்பதால், வெற்றிக்கான ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கும்.
எனவேதான், தி.மு.க., தரப்பில், மண்டல பொறுப்பாளர்கள் வழியே, கட்சி போட்டியிடும் விபரத்தை கூறி, பிரசார பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க.,வில், ஒரு சில மாவட்ட செயலர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் வேலை நடக்கிறது. ஆனாலும், அ.தி.மு.க., போட்டியிடக்கூடிய தொகுதிகளை குறி வைத்து, கூட்டணி கட்சிகளும் வேலை செய்வதால், குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தி.மு.க.,வுக்கு சாதகமான சூழலை உருவாக்கி இருக்கிறது. எனவே, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை விரைந்து முடிக்க வேண்டும் என, பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

