வழக்கு அபராதங்களுக்கு அதிகாரிகளே பொறுப்பு நிதித்துறை உத்தரவு
வழக்கு அபராதங்களுக்கு அதிகாரிகளே பொறுப்பு நிதித்துறை உத்தரவு
ADDED : ஏப் 25, 2025 12:21 AM
சென்னை:'நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் விதிக்கப்படும் அபராதங்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்குங்கள்' என, பொதுத்துறை நிறுவனங்களுக்கு, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக வழக்குகள் வருகின்றன. பொதுமக்கள், தனியார் அமைப்புகள் சார்பில், வழக்குகள் தொடரப்படுகின்றன.
இந்த வழக்குகளை தொடர்ந்து கவனிக்க, நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த, ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்திலும் வழக்கறிஞர் பிரிவு உள்ளது.
இருப்பினும் சமீப காலமாக, வீட்டுவசதித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில், நீதிமன்ற உத்தரவுகள் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான, சி.எம்.டி.ஏ., தொடர்பான ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உறுப்பினர் செயலருக்கு அபராதம் விதித்ததுடன், அதை சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில அதிகாரிகளின் அலட்சியமே, இப்பிரச்னைக்கு காரணம் என்றும், நீதிமன்ற பார்வையில் உயர் அதிகாரிகளே சிக்குகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக் கும், நிதித்துறை செலவுகள் பிரிவு செயலர் எஸ்.நாகராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இதில், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் வாயிலாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு, உரிய காலத்துக்குள் முறையான பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விபரங்களை, உடனுக்குடன் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இதில், பதில் மனுக்கள் தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் விதிக்கப்படும் அபராதம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் நிதி இழப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும்.
வழக்குகள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.