ADDED : ஜன 06, 2024 11:58 PM

சென்னை : 'பொங்கல் பரிசு வினியோகம், ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் கார்டுதாரரின் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்' என, உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர், அனுப்பியுள்ள வழிகாட்டுதல் சுற்றறிக்கை விபரம்:
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை வரும், 10ம் தேதி முதல் துவக்க வேண்டும். தொடர்ந்து, 14ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும்; 12ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்.
ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு வினியோகம், ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் கார்டுதாரரின் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
விரல் ரேகை சரிவர, தெளிவாக பதிய இயலாத கார்டுதாரர்களுக்கு மட்டும், அவர்கள் நேரில் வருகை தருவது உறுதி செய்யப்பட்டு, பதிவேட்டில் கையொப்பம் பெற்று, வினியோகம் செய்யலாம்.
எக்காரணத்தை முன்னிட்டும், அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பரிசு தொகை பெற அனுமதியில்லை.
ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.