நீர் மின்நிலைய மின்மாற்றியில் தீ விபத்து மின் வினியோகத்தில் சிக்கல்
நீர் மின்நிலைய மின்மாற்றியில் தீ விபத்து மின் வினியோகத்தில் சிக்கல்
ADDED : ஏப் 13, 2025 03:32 AM

மூணாறு: கேரள மாநிலம் மூலமற்றம் நீர்மின் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்மாற்றி திடீரென வெடித்து சிதறி தீப்பற்றியது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணையின் தண்ணீரை கொண்டு மூலமற்றம் நீர் மின் நிலையத்தில் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.
அங்கு துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடிரென மின்மாற்றி பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறி தீப்பற்றியது. அப்போது பணியில் இருந்த மேற்பார்வையாளர் வின்ஸ் தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றதுடன் மூலமற்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அவர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனிடையே 3ம் எண் ஜெனரேட்டர் பழுதடைந்து, அதில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மூலமற்றம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
அனுமதி
தீயணைப்பு கருவியை பயன்படுத்திய வின்சுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொட்டியாறு நீர்மின் நிலையத்தில் இருந்து நேற்று மின்மாற்றி கொண்டு வரப்பட்டபோதும், பழுதை சீரமைப்பது ஒரு வாரம் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிக்கல்
மூலமற்றம் நீர்மின் நிலையத்தில் இருந்து இரண்டு 220 கே.வி. கம்பிகள் மூலம் களமச்சேரி மின்நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதில் ஒரு மின்மாற்றி தீப்பற்றி சேதமடைந்ததால் எர்ணாகுளம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் மின் வினியோகத்திற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

