தமிழன்னை, மதுரை மண்ணிற்கு முதல் வணக்கம்: தலைமை நீதிபதி
தமிழன்னை, மதுரை மண்ணிற்கு முதல் வணக்கம்: தலைமை நீதிபதி
ADDED : அக் 29, 2024 04:51 AM

மதுரை : ''தமிழன்னை, மதுரை மண்ணிற்கு முதல் வணக்கம்,' என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மதுரை கிளையில் நடந்த வரவேற்பு விழாவில் தமிழில் பேசினார்.
மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செப்., 27ல் பதவியேற்றார்.
முதன்முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நேற்று வந்தார். மும்பையில் பிறந்த அவர் கேரளா கல்பாத்தியை பூர்வீகமாகக் கொண்டவர்.
வரவேற்பு விழா நேற்று நடந்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், ஐசக்மோகன்லால், அன்பரசு, ஆனந்தவள்ளி வரவேற்று பேசினர். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசியதாவது:
தமிழன்னை, மதுரை மண்ணிற்கு முதல் வணக்கம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கிழக்கின் ஏதென்ஸ், கலாசார நகரம், துாங்கா நகரம் என அழைக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில், மணம் பரப்பும் மல்லிகை, ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு உயர்ந்த கலாசார மதிப்பீடுகளை கொண்டது மதுரை.
மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 7 தலைமை நீதிபதிகள் வந்துள்ளனர். இது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரது உரையின் பெரும்பகுதி தமிழிலும், சிறு பகுதி ஆங்கிலத்திலும் இருந்தது.