ADDED : பிப் 18, 2025 06:19 AM

காரைக்கால்; இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, மீனவ பெண்கள் ரயில் முன்பாக தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவரின் விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த 26ம் தேதி வங்கக் கடலில் கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை கைது செய்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த செந்தமிழ்,27; பிரபு,31; மாணிக்கவேல், 39; ஆகியோர் இலங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசைப்படகை ஓட்டிய அன்பழகனுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.40 லட்சம் அபராதம் மற்றும் 9 மாதம் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 9 பேர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கை அரசு சிறைபிடித்த மற்ற 4 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், விசைப்படகு ஓட்டிய அன்பழகனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் மற்றும் 9 மாதம் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 11ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏழாம் நாளான நேற்று, போராட்டக் குழுவினர் தலைமையில் திரண்ட மீனவ பெண்கள் காலை 9;40 மணிக்கு காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூருக்கு புறப்படத் தயாராக இருந்த பயணிகள் ரயில் முன், தண்டவாளத்தில் பெண்கள் தலையை வைத்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின், போலீசார் தண்டவாளத்தின் இருபுறமும் அணிவகுத்து நின்று, 10:10 மணிக்கு ரயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

