வெள்ள நிவாரண பணிகள் துரிதம் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டி
வெள்ள நிவாரண பணிகள் துரிதம் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டி
ADDED : டிச 14, 2024 03:54 AM
விழுப்புரம்:'தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் துரிதமாக நடக்கிறது. ஒரு சிலர் பரப்பும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் பேரிடர் மைய கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அவர், நேற்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்புகளை தடுக்க பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு, அரசு துறை அலுவலர்களுக்கும், அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று, பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுள்ள கனமழை பாதிப்புகள் குறித்து, அந்தந்த மாவட்ட உயர் அலுவலர்களிடம், பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
அரசு சார்பில் வெள்ள நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வரின் மீட்பு பணிகளை நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக, நிவாரண பணி தாமதம், நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என தவறான தகவலை தெரிவிக்கின்றனர். இதைப்பற்றி கவலைப்படாமல், மக்களை பாதுகாக்கும் பணியில் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார்.
வெள்ள நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்களை முழுமையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், குறைபாடுகள் இருப்பதாக தெரிய வந்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.