/
செய்திகள்
/
தமிழகம்
/
மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு * 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பு
/
மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு * 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பு
மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு * 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பு
மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு * 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பு
ADDED : டிச 03, 2024 06:09 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
கனமழை காரணமாக சாத்தனுார் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் திருக்கோவிலுார் அணைகட்டு வந்தடைந்தது. அதை தொடர்ந்து, மலட்டாற்றில், நேற்று அதிகாலை, திடீரென 10 ஆயிரம் கனடிக்கு மேல் நீர் வரத்து இருந்தது.
அதன்காரணமாக ஆற்றோரமாக உள்ள ,திருவெண்ணெய்நல்லுார், டி.எடையார், தொட்டிக்குடிசை, கண்ணாரம்பட்டு, தென்மங்கலம், அரசூர், பாரதிநகர், இருவேல்பட்டு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
அரசூர் கூட்ரோடு திருவெண்ணெய்நல்லுார் சாலை, மலட்டாறின் குறுக்கே உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள கடைகள், வீடு, கார், சரக்கு லாரி, ஆம்னி வேன் மற்றும் 20க்கும் மேற்பட்ட பைக்குகள் ஆகியவை வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வாகனங்களை அரசூர், வி.ஆர்.எஸ்., கல்லுாரிக்கு எதிரே திருப்பி, சென்னை - திருச்சி சாலையை ஒருவழிசாலையாக மாற்றி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே சாலையில் சென்றதால் அதிகளவில் நெரிசல் ஏற்பட்டு 2 கி.மீ., துாரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
வெளிமாவட்டங்களிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களை மடப்பட்டில் மடக்கி, பண்ருட்டி, திருக்கோவிலுார் வழியாக சென்னை மார்க்கத்திற்கு அனுப்பினர்.
அரசூர் கூட்ரோடு பகுதியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அச்சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேபோல், இருவேல்பட்டு பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்த வௌ்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருவேல்பட்டு கிராம ஆற்றோர பகுதியில் வசித்து வந்த 300க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்களை மீட்டு அரசூர் தனியார் திருமண மண்டபம் மற்றும் வி.ஆர்.எஸ்., கல்லுாரிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர்.