மாதம் 185 ஏக்கரில் மட்டுமே களை தாவரங்கள் அகற்றம்; இலக்கை எட்டுவதில் வனத்துறை மெத்தனம்
மாதம் 185 ஏக்கரில் மட்டுமே களை தாவரங்கள் அகற்றம்; இலக்கை எட்டுவதில் வனத்துறை மெத்தனம்
ADDED : ஜன 03, 2026 06:50 AM

சென்னை: தமிழகத்தில், 4.38 லட்சம் ஏக்கரில், களை தாவரங்கள் இருக்கும் நிலையில், மாதம், 185 ஏக்கரில் மட்டுமே அகற்றப்படுவதால், வனத்துறையால் களை தாவரங்களை அகற்றுவதில் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வனப்பகுதிகளில், களை தாவரங்கள் பரவலாக அதிகரித்து வருகின்றன. இதனால், வனப்பகுதிகள் வளம் குன்றும் நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக, வனப்பகுதி மேம்பாட்டில், களை தாவரங்களை அகற்றுவது, பிரதான பணியாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் இதற்காக புதிய கொள்கை மற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதில், அன்னிய தாவர வகைகளை இறக்குமதி செய்வது, பரவ வைப்பதையும் தடுக்க, சட்ட நடைமுறைகள் உருவாக்க உத்தரவிடப்பட்டது.
அத்துடன் வனப்பகுதிகளில் காணப்படும் அன்னிய களை தாவரங்களை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டன. இப்பணி மெதுவாக நடப்பதால், களை தாவரங்களை அகற்றும் நோக்கத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2021ல் அறிவிக்கப்பட்ட கொள்கை மற்றும் திட்டப்படி, களை தாவரங்கள் பரவல் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உண்ணிச் செடி, கருவேலம், சீமை அகத்தி, கத்தி சவுக்கு வகையைச் சேர்ந்த களை தாவரங்கள், 4.38 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு இருப்பது உறுதியானது.
அவற்றை முற்றிலுமாக அகற்ற, ஆண்டுக்கு 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்த வேகத்தில் களை தாவரங்களை அகற்றும் பணி நடக்கவில்லை.
கடந்த 2024 நிலவரப்படி, மாதம், 123 ஏக்கர் அளவுக்கே, களை தாவரங்களை அகற்றும் பணிகள் நடந்துள்ளன. இது, 2025ல், மாதம், 180 ஏக்கர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஆனால், களை தாவரங்களின் மொத்த பரப்பளவுடன் ஒப்பிட்டால், இது மிகவும் குறைவு. தற்போதைய நிலவரப்படி, 4.38 லட்சம் ஏக்கரில், 88 லட்சம் ஏக்கர் அளவுக்கே, களை தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இன்னும், 3.49 லட்சம் ஏக்கர் களை தாவரங்களை அகற்ற வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் தாமதம், களை தாவரங்கள் வளர்ச்சி போன்றவை, இப்பணிக்கு சவாலாக மாறியுள்ளது.
எனவே, மாதம் குறைந்தது 300 ஏக்கர் அளவுக்கு, களை தாவரங்களை அகற்றும் வகையில், கூடுதல் நிதி, பணியாளர்களை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

