ADDED : மார் 08, 2024 10:01 PM
சென்னை:திருவள்ளூர், திண்டுக்கல், வேலுார் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், 90 இடங்களில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கோடையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. குளிர்காலம் விடைபெற்று, கோடை காலம் துவங்கும் சமயத்தில் வனப்பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பது வழக்கம்.
இதை கட்டுப்படுத்த செயல்திட்டம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிக தீ விபத்துகள் ஏற்படும் இடங்களில் கண்காணிப்பை வனத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காட்டுத்தீ ஏற்படும் இடங்கள் குறித்த விபரங்கள் இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் வாயிலாக தமிழக வனத்துறைக்கு அனுப்பப்படுகின்றன.
அதன்படி, நேற்று பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், அதிகபட்சமாக வேலுார் மாவட்டத்தில், 41 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில், 20 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
சேலம், 9; கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா, 7; திருவள்ளூரில், 5; மதுரையில் ஒரு இடம் என, 7 மாவட்டங்களில், 90 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.
இத்தகவலை அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, தீ அணைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

