ADDED : டிச 14, 2024 07:04 PM
சென்னை:காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 75, காலமானார்.
ஈ.வெ.ரா.,வின் சகோதாரர் ஈ.வெ.கிருஷ்ணசாமின் பேரனும், ஈ.வி.கே.சம்பத் - சுலேசனாவின் மகனுமான இளங்கோவன், 1948 டிச., 21ல் ஈரோட்டில் பிறந்தார். சென்னை மாநில கல்லுாரியில் பி.ஏ., பொருளாதாரம் பட்டம் பெற்றார். ஈ.வி.கே.சம்பத் மறைவுக்கு பின், அவரது நண்பரும் நடிகருமான சிவாஜி கணேசனுடன், 1977 முதல் 1989ம் ஆண்டுகளில் காங்கிரசில் பயணித்தார்.
அப்போது, சத்தியமங்கலம் சட்டசபை தொகுதியில், காங்., கட்சியில் சிவாஜி ஆதரவு பிரிவில், முதல் முறையாக வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின், ஜனாகிக்கு எதிராக சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க, காங்கிரசாருக்கு, அப்போதைய பிரதமர் ராஜிவ் அனுமதி மறுத்தார்.
இதனால், ஜானகிக்கு ஆதரவாக, காங்கிரசில் இருந்து சிவாஜி கணேசன் விலகியபோது, இளங்கோவனும் வெளியேறினார். பின், சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி சார்பில், ஈரோடு, பவானி சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சிவாஜி கட்சியை கலைத்தபோது, இளங்கோவன், மீண்டும் காங்கிரசில் இணைந்தார். கடந்த, 1996 முதல் 2001 வரை, தமிழக காங்., தலைவராக செயல்பட்டார். பின், மூப்பனாருக்காக அப்பதவியை விட்டு கொடுத்தார்.
கடந்த 2004 லோக்சபா தேர்தலில், கோபியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். பின், 2014 - 17 வரை மீண்டும் தமிழக காங்., தலைவரானார்.
கடந்தாண்டு அவரது மூத்த மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான திருமகன் ஈ.வெ.ரா., மரணம் அடைந்ததை தொடர்ந்து, அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், இளங்கோவன் போட்டியிட்டு, 39 ஆண்டுக்கு பின், எம்.எல்.ஏ., ஆனார்.
இந்நிலையில், இதய பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதற்காக, நவ., 11ம் தேதி முதல், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி, நேற்று காலை இளங்கோவன் உயிரிழந்தார்.
அவரின் உடல், மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, சுப்பிரமணியன், அன்பரசன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் காங்., தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், பா.ஜ., சார்பில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கவர்னர் ரவி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரின் உடல், கட்சி தொண்டர்கள், பொது மக்களின் அஞ்சலிக்காக, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, முகலிவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என, காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கோவனுக்கு வரலட்சுமி என்ற மனைவியும், சஞ்சய் சம்பத் என்ற மகனும் உள்ளனர்.