சென்னையில் நாளை நடக்கிறது 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அண்ணாமலை, ரவி வழிகாட்டுகின்றனர்
சென்னையில் நாளை நடக்கிறது 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அண்ணாமலை, ரவி வழிகாட்டுகின்றனர்
ADDED : டிச 13, 2024 01:48 AM

சென்னை:'தினமலர்' நாளிதழ், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் வழங்கும், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், நாளை காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது.
இதில், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., இயக்குநர் ரவீந்திரன், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அண்ணாமலை, ரவி ஆகியோர் வழிகாட்டுகின்றனர்.
விழிப்புணர்வு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உட்பட பல்வேறு உயரிய அரசு பணியிடங்களுக்கு, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு வாயிலாகவே அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மாநில அரசின் பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ' போன்ற பல்வேறு தேர்வுகளின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மத்திய, மாநில அரசு பணிகளுக்கான இத்தகைய தேர்வுகள் குறித்தும், தேர்வுகளை திறம்பட அணுகும் விதம் குறித்தும், மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'தினமலர்' நாளிதழ், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் இணைந்து, 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியில், 'சிவில் சர்வீசஸ் தேர்வுகளும், சமீபத்திய மாற்றங்களும்' என்ற தலைப்பில், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., இயக்குநர் ரவீந்திரன், 'அரசு பணி சாத்தியமே!' என்ற தலைப்பில் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, 'அரசு போட்டித் தேர்வுகளில் சாதிப்பது எப்படி?' என்ற தலைப்பில் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி ஆகியோர் பேசுகின்றனர்.
யு.பி.எஸ்.சி., தேர்வு முறைகள், தேர்வுகளில் சாதிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பிரிலிமினெரி, மெயின்ஸ் மற்றும் இன்டர்வியூ ஆகியவற்றில் திறம்பட செயல்படும் விதம் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற என்ன படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எப்போது படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், விருப்ப பாடத்தை தேர்வு செய்வது எப்படி உட்பட அனைத்து சந்தேகங்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னையை தொடர்ந்து, வரும் 15ம் தேதி மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கிலும், வரும் 21ம் தேதி, கோவை எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியத்திலும், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி நடக்கிறது.
வழிகாட்டி புத்தகம்
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் 95667 77833 என்ற வாடஸாப் எண்ணிற்கு, IAS என டைப் செய்து அனுப்பி, இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து பங்குபெறும் அனைவருக்கும், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.