'தி.மு.க.,வின் அடிமை சாசனத்தை உதயநிதி படித்துப் பார்க்க வேண்டும்' முன்னாள் அமைச்சர் உதயகுமார் காட்டம்
'தி.மு.க.,வின் அடிமை சாசனத்தை உதயநிதி படித்துப் பார்க்க வேண்டும்' முன்னாள் அமைச்சர் உதயகுமார் காட்டம்
ADDED : டிச 08, 2025 06:20 AM

மதுரை: ''மத்தியில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்ற தி.மு.க.,வின் அடிமை சாசனத்தை உதயநிதி படித்துப் பார்க்க வேண்டும்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
தொண்டர்களின் பாசத்தை இணைத்து தி.மு.க., என்ற கட்சியை அண்ணாதுரை துவக்கினார். அக்கட்சியை கருணாநிதி குடும்ப கட்சியாக மாற்றி, மன்னர் ஆட்சியை உருவாக்க நினைத்தபோது, எம்.ஜி.ஆர்., மக்களாட்சியை மலரச் செய்து, பொற்கால ஆட்சியை அமைத்து சேவை செய்தார்.
அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா, அவரது மறைவுக்குப் பின், நான்கரை ஆண்டுகாலம் சாமானியரான பழனிசாமியும் ஆட்சியில் சாதனை படைத்தார்.
தனிநபர் விமர்சனம் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி செய்து மக்களின் இதயங்களில் உள்ளது. மீண்டும் 2026 ல் பழனிசாமி தலைமையில மக்களாட்சி மலர தமிழக மக்கள் தீர்ப்பு எழுதத் தயாராகி விட்டனர். இதை பொறுக்க முடியாத உதயநிதி செல்லும் இடங்களில் அ.தி.மு.க.,வின் செல்வாக்கு, பழனிசாமி பற்றி கிண்டல் பேசுவதை கொள்கையாக வைத்துள்ளார்.
ஐம்பதாண்டு பொதுவாழ்வுள்ள பழனிசாமியின் திட்டங்கள் குறித்து விமர்சிக்கவில்லை. விளையாட்டுப் பிள்ளையான நீங்கள் மக்கள் முகம் சுளிக்கும் வகையில், அரசியல் நாகரிகமின்றி எல்லை தாண்டிப் பேசுவதை மக்கள் பொறுக்க மாட்டார்கள்.
உங்கள் பேச்சு உங்களுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல.
தி.மு.க.,வின் அடிமை சாசனம் அ.தி.மு.க.,வைப் பற்றி அடிமை வார்த்தையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்கிறீர்கள். மத்தியில் பல்வேறு கூட்டணிகளின் ஆட்சி அமைச்சரவையில் நீங்கள் இடம் பெற்றீர்கள். பா.ஜ., -காங்.,- ஜனதாதளம் என நீங்கள் கூட்டணி அமைத்தபோது, உங்கள் அடிமை சாசன வரலாற்றை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
இன்று தமிழக சேவையில், மக்கள் பாசத்தால், விசுவாசத்தால், சிந்தனையால், எதிர்கால அர்ப்பணிப்பு, தியாகம் சேவைக்குத்தான் பழனிசாமி அடிமையாக உள்ளார்.
உங்கள் விமர்சனம் ஒருபோதும் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் தரப்போவதில்லை. உங்கள் ஏமாற்ற நாடகம் ஒருநாள் முடிவுக்கு வரும். இன்றைய ஆட்சி முடிய 3 மாதங்கள்தான் உள்ளன.
2026ல் நீங்கள் வீட்டுக்குப் போவீர்கள். பழனிசாமி கோட்டைக்குப் போவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

