ADDED : ஜூன் 30, 2025 03:23 AM

திண்டிவனம் : பா.ம.க., சமூக ஊடக பிரிவினர் கூட்டத்தை, அன்புமணி கூட்டிய மறுதினமே, ராமதாசும், கட்சியின் சமூக ஊடக பிரிவினர் கூட்டத்தை நேற்று கூட்டினார்.
சென்னை சோழிங்கநல்லுாரில் பா.ம.க., சமூக ஊடக பேரவை கூட்டத்தை, கட்சியின் தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் கூட்டினார். அதில் பேசிய அவர், 'கடந்த 5 ஆண்டுகளாக, ராமதாஸ் பழைய ஆளாக இல்லை, வயது முதிர்வால் குழந்தைபோல் மாறிவிட்டார். கட்சி விதிகளின் படி, பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் நிறுவனருக்கு இல்லை' என, கூறினார்.
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., சமூக ஊடக பேரவை பொறுப்பாளர்கள் கூட்டத்தை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று கூட்டினார். இதில், பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன்குமார் வாண்டையார், மாநில தலைவர் ஆனந்தன், செயலர் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “பா.ம.க., சமூக ஊடக பேரவையினர், மாவட்டம் வாரியாக பொறுப்புகளை மறுசீரமைத்து, அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், சிறப்பாக செயல்பட வேண்டும்.
''இணையதளம் வாயிலாக, பா.ம.க., கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். சமூக ஊடகங்களில், யாராவது நாகரிகமற்ற முறையில் விமர்சித்தாலும், அவர்களுக்கு நாகரிகமாக பதில் சொல்ல வேண்டும்,” என்றார்.
நேற்று முன்தினம், ராமதாசை குழந்தை என அன்புமணி விமர்சித்த நிலையில், அதற்கு ராமதாஸ் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்தார்.
ஆனால், விரைவில் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து, கட்சியினருடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.