ADDED : செப் 22, 2024 01:08 AM
சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன் விலை, 55,680 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை, இந்தாண்டு துவக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது.
நம் நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்தது. தமிழகத்தில் இந்தாண்டு ஜூலை 17ல் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,360 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. அடுத்த சில தினங்களில் விலை சற்று குறைந்து, 55,000 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது.
மத்திய பட்ஜெட் ஜூலை 23ல் தாக்கல் செய்யப்பட்டபோது, தங்கம் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால், அந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு, 3,000 ரூபாய் வரை குறைந்தது.
பின், தங்கம் விலை தினமும் படிப்படியாக அதிகரித்து வந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 6,885 ரூபாய்க்கும், சவரன் 55,080 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம் 97.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து, 6,960 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 55,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதுவே, இதுவரை தங்கம் விற்பனையில் உச்ச விலை. வெள்ளி கிராமுக்கு, 50 காசு உயர்ந்து, 98 ரூபாய்க்கு விற்பனையானது.