UPDATED : ஜூலை 23, 2023 07:46 AM
ADDED : ஜூலை 23, 2023 07:45 AM

அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்வதை கேள்விபட்டு இருக்கலாம். ஆனால், திருவாரூர் மாவட்டத்தில், தனியார் நிலத்தை, அரசு ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, நீடாமங்கலத்தை சேர்ந்த லலிதா சாமிநாத பிரசாத் என்பவர் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் என் சொந்த ஊர். அங்கு சர்வமானிய தெரு உள்ளது. நீலகண்ட சாஸ்திரி என்பவருக்கு சொந்தமான நிலம், அங்கு இருந்தது. அவர் மறைவுக்கு பின், அந்த நிலத்தை, அவரது வாரிசுகள் விற்றனர்; அதை நான் வாங்கினேன்.
![]() |
வெற்று நிலம்
கடந்த, 2011 மார்ச் 28ல் என் பெயரில் பத்திரப்பதிவு செய்து, பட்டா மாறுதலும் செய்து விட்டேன். 6,395 சதுர அடி நிலத்தில் இருந்த பழைய வீட்டை இடித்து விட்டோம்; அதன்பின், வெற்று நிலமாக இருந்தது.
அதன் அருகில், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. நிலம் வாங்கும் போதே, என் இடத்தில் பள்ளி சார்பில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு கட்டடமும், கழிப்பறையும் இருந்தன; அதை அப்படியே விட்டு விட்டேன்.
தற்போது, அரசு சார்பில் பள்ளியை விரிவுபடுத்தி கட்டடம் கட்டுகின்றனர். என் இடத்தில், 1,600 சதுர அடிக்கும் மேல் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த கட்டடம் எழுப்பப் படுகிறது.
கடந்த ஜூன் மாதம், அந்த தகவல் எனக்கு தெரிய வந்தது. உடனே, கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர், பள்ளி தலைமை ஆசிரியர், தாசில்தாரை அணுகி, 'அரசே தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டலாமா?' என கேட்டேன். ஒப்பந்ததாரர், 'கலெக்டரிடம் பேசுங்கள்' என்றார்.
அதன்பின், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சோம செந்தமிழ் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கலெக்டர் சாருஸ்ரீ உள்ளிட்ட பலரையும் தொடர்பு கொண்டேன்; யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை.
அதையடுத்து, நீடாமங்கலம் போலீசில் புகார் அளித்தேன். 'இது சிவில் பிரச்னை; கோர்ட்டை அணுகுங்கள்' என, கூறி விட்டனர்.
அதன்பின்பே, சட்ட ரீதியாக பிரச்னையை சந்திக்க முடிவெடுத்து, எல்லாருக்கும் வழக்கறிஞர் மூலமாக, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளேன்; யாரிடம் இருந்தும் பதில் இல்லை.
இதற்கிடையே, என் கணவர் சாமிநாத பிரசாத் மீது, கட்டட வேலையில் ஈடுபடும் நபர்கள் வாயிலாக, தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை சட்டத்தின் கீழ், பொய் புகார் கொடுத்துள்ளனர். இந்த பிரச்னையில், அதிகாரிகள் துணையுடன், தி.மு.க.,வினர் அடாவடியாக களம் இறங்கி செயல்படுகின்றனர்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணன், தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோரும் தவறுக்கு துணையாக உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் சித்தமல்லி சோம செந்தமிழ்செல்வன் கூறியதாவது:
லலிதாவின் இடத்தை சுற்றி, மூன்று பக்கமும் கட்டடம் உள்ளது. நடுவில் களத்து புறம்போக்கு உள்ளது. அதையும் சேர்த்து தான் லலிதா வாங்கிஉள்ளார்.
பல ஆண்டுகள் கழித்து, அந்த இடத்துக்கு பட்டா வாங்கியுள்ளார். களத்து புறம்போக்கு இடத்தையும் சேர்த்து, லலிதா பெயரில் பட்டா போட்டு கொடுத்து விட்டனர்; அது அரசுக்கு சொந்தமானது. அந்த இடத்தில் தான், தற்போது பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
களத்து புறம்போக்கை லலிதா தான் ஆக்கிரமித்துள்ளார். அதனால், அவரது பட்டாவை ரத்து செய்ய, கலெக்டருக்கு ஒன்றிய நிர்வாகம் சார்பில் பரிந்துரைத்துள்ளோம்.
கட்டடம் இரண்டு தளங்களை கடந்து விட்டது. அதன் மேல் கை வைக்க முடியாது. இனி, சட்ட ரீதியாகவே எல்லாம் நடக்கும்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ், லலிதாவின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் ஆய்வாளரிடமும் கூறப்பட்டு, மேல் நடவடிக்கை தடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
'கோர்ட்டில் தான் தீர்வு'
நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:
பள்ளிக்கு சொந்தமான கழிப்பறை, சுத்திகரிப்பு கட்டடம் ஆகியவை, லலிதா குறிப்பிடும் இடத்தில் தான் உள்ளன. அதனால், குறிப்பிட்ட இடம், பள்ளிக்கு தான் சொந்தமானது.
பொதுவாக பள்ளிக்குள் இருக்கும் இடம் என்பதால், பணிக்கு ஒப்பந்தம் அளிக்கும் முன், பட்டா, பத்திரம் போன்றவை கேட்கப்படுவதில்லை. வெளியிடம் என்றால், அதை பார்த்திருப்போம்.
இப்போது, இடம் என்னுடையது என லலிதா பிரச்னை கிளப்புகிறார். இனி, அவருக்கான தீர்வு கோர்ட் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாருஸ்ரீ, கலெக்டர், திருவாரூர்.

