பட்டாசு தொடர் விபத்துக்கு அரசு நிர்வாகமே காரணம் * மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
பட்டாசு தொடர் விபத்துக்கு அரசு நிர்வாகமே காரணம் * மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
ADDED : பிப் 06, 2025 09:42 PM
சென்னை:'விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் தொடர் பட்டாசு விபத்துக்களுக்கு, அரசு நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களின் மெத்தனப்போக்கும் முக்கிய காரணமாக உள்ளது' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
விருதுநகர் மாவட்டத்தில், தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தொழிலாளர்கள் உயிரிழப்பதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் கறாராக கடைபிடித்தால், விபத்துகள் நடப்பதை தடுக்க முடியும்.
அரசு நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களின் மெத்தனப்போக்கும் பட்டாசு விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இனிவரும் காலங்களில், பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தை தடுக்க, அரசின் விதிமுறைகளை கறாராக கடைபிடிக்க வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருப்பதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
உயிரிழந்த குடும்பத்தினருக்கு, தமிழக அரசின் சார்பில், 4 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதல்ல. பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஆலை நிர்வாகம், 10 லட்சம் ரூபாயும், அரசு நிர்வாகம், 20 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்.
உயிரிழக்கும் தொழிலாளர் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும், தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.