நிதியில்லை என அரசு கைவிரிப்பு சிறப்பு பயிற்றுனர்கள் போராட்டம்
நிதியில்லை என அரசு கைவிரிப்பு சிறப்பு பயிற்றுனர்கள் போராட்டம்
ADDED : ஜன 27, 2026 07:01 AM

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21ம் தேதி முதல், சிறப்பு பயிற்றுனர்கள், சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று ஆறாம் நாளாக, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர். இது குறித்து, சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் காணிராஜா கூறியதாவது:
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் எங்களைத் தவிர மற்ற அனைவருக்கும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், எங்களை புறக்கணிப்பது வேதனையாக உள்ளது. பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தியை நேரில் சந்தித்து, எங்களின் கோரிக்கையை தெரிவித்தோம். அதற்கு, 'மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி வழங்கவில்லை.
'இதனால், உங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் அளவிற்கு அரசிடம் போதிய நிதி இல்லை' என தெரிவித்தார். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

