தர்ப்பூசணி விவசாயிகள் நெருக்கடி இழப்பீடு வழங்க அரசு பரிசீலனை
தர்ப்பூசணி விவசாயிகள் நெருக்கடி இழப்பீடு வழங்க அரசு பரிசீலனை
UPDATED : ஏப் 19, 2025 02:51 AM
ADDED : ஏப் 19, 2025 12:12 AM

சென்னை:தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, அரசுக்கு வேளாண் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உட்பட, பல்வேறு மாவட்டங்களில், தர்ப் பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
முன்னர் கோடைகால பயிராக இருந்த தர்ப்பூசணி, தற்போது ஆண்டு முழுதும் சாகுபடி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தர்ப்பூசணி பழங்களில், சுவை மற்றும் நிறத்திற்காக, சிலர் ரசாயன ஊசி செலுத்துவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ வேகமாக பரவியது. இதனால், தர்ப்பூசணி வியாபாரம் முடங்கியது. வயல்களில் கிலோ, 5 ரூபாய்க்கு கூட தர்பூசணி விலை போகவில்லை.
இதனால், 10,௦௦௦க்கும் அதிகமான, தர்ப்பூசணி விவசாயிகள், நஷ்டத்திற்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஏக்கருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் தனிப்பிரிவு மற்றும் வேளாண்துறை செயலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க, அரசுக்கு வேளாண் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
நிதித்துறை ஒப்புதல் வழங்கினால், தர்ப்பூசணி விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 10,000 ரூபாய், குறைந்தபட்ச நிவாரணம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு வசதியாக, பாதிக்கப்பட்ட தர்ப்பூசணி வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு, தோட்டக் கலைத்துறை வாயிலாக, ரகசியமாக செய்து முடிக்கப்பட்டு உள்ளது.