கைவிடப்பட்ட குவாரிகளை நீர்நிலையாக்க அரசு முடிவு மதுக்கரைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
கைவிடப்பட்ட குவாரிகளை நீர்நிலையாக்க அரசு முடிவு மதுக்கரைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 09, 2025 10:19 PM
சென்னை:'தமிழகத்தில் கைவிடப்பட்ட சுண்ணாம்புக்கல் குவாரிகளை, நீர்த்தேக்கமாக மாற்றும் பணி, 10 கோடி ரூபாயில் துவக்கப்பட்டுள்ளது' என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கட்டுமானப் பணிக்கான கருங்கல், கிரானைட், சிமென்ட் தயாரிப்பதற்கான சுண்ணாம்புக்கல் போன்றவை, குவாரி அமைத்து எடுக்கப்படுகின்றன.
கனிமவளத் துறை அனுமதி பெற்று, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, குவாரிகள் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்த நிலையில், கைவிடப்பட்ட குவாரிகளை முறையாக மண் கொட்டி மூட வேண்டும்.
ஆனால், குவாரி உரிமம் பெறும் நிறுவனங்கள், மண் கொட்டி மூடும் பணிகளை முறையாக செய்வதில்லை. இத்தகைய குவாரிகளை நீர்நிலையாக மாற்றினால், அந்தந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என கருதப்படுகிறது.
இதற்கான பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில், 'ஏசிசி சிமென்ட்' நிறுவனத்துக்கு சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க, 1964ல், 161 ஏக்கர் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதிக்கப்பட்டது. இங்கு சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணிகள், 2024ல் நிறுத்தப்பட்டன.
இனி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த குவாரியை நீர்நிலையாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறோம். இங்கு நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பான பணிகளுக்கு முதற்கட்டமாக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரியலுார் மாவட்டம் கீழப்பழவூர் கிராமத்தில், 'செட்டிநாடு சிமென்ட்ஸ்' நிறுவனத்துக்கு சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதிக்கப்பட்ட குவாரியும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
உள்ளூர் மக்கள் கோரிக்கை அடிப்படையில், அந்த குவாரியையும் நீர்நிலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. இதேபோல், பிற மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட குவாரிகள் குறித்த விபரங்கள் திரட்டப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

