காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உண்மைத்தன்மை சரிபார்ப்புக்கு அரசு கெடு
காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உண்மைத்தன்மை சரிபார்ப்புக்கு அரசு கெடு
ADDED : பிப் 04, 2025 11:34 PM
சென்னை:சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் விரல் ரேகை பதிவு பணியை, மார்ச்சுக்குள் முடிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 2.35 கோடி வீட்டு காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் பயனாளியின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு பணி, கடந்த ஓராண்டாக நடக்கிறது.
அதன்படி, சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் காஸ் ஏஜன்சிக்கு சென்று, விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவாகாத பட்சத்தில், விழி ரேகை அல்லது முகம் பதிவு வாயிலாக, வாடிக்கையாளர் உண்மை விபரம் உறுதி செய்யப்படுகிறது.
ஏஜன்சிக்கு நேரில் செல்ல இயலாதவர்கள், எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் போன் செயலி அல்லது சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களின் மொபைல் போன் செயலி வாயிலாக பதிவு செய்யலாம். இதுவரை, மொத்த வாடிக்கையாளர்களில் பாதி பேர் கூட, விரல் ரேகை பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், உண்மை சரிபார்ப்பு பணியை, வரும் மார்ச்சுக்குள் முடிக்க எண்ணெய் நிறுவனங்களை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு, ஏப்ரலில் இருந்து மானியம் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் உள்ள காஸ் சிலிண்டர் பயனாளிகளில், 60 சதவீதம் பேர் விரல் ரேகை பதிவு செய்துள்ளனர். ஆனால், சென்னையில், 25 சதவீதம் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, 50 சதவீதம் பேர் கூட ஒத்துழைக்கவில்லை. எனவே, சிறப்பு முகாம்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களின் உண்மை சரிபார்ப்பு பணியை, மார்ச்சுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.