சம வேலைக்கு சம ஊதியம் தர அரசு ஓட்டுனர்களும் கோரிக்கை
சம வேலைக்கு சம ஊதியம் தர அரசு ஓட்டுனர்களும் கோரிக்கை
ADDED : மார் 03, 2024 01:48 AM
சென்னை : 'ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும்' என, அகில இந்திய அரசு துறை வாகன ஓட்டுனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்திஉள்ளது.
அகில இந்திய அரசு துறை வாகன ஓட்டுனர்கள் கூட்டமைப்பின், தென்மண்டல செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில், கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் கண்ணன், துணை தலைவர் மதுரை குமார், பொதுச்செயலர் சப்தால் கவுசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்ற பரிந்துரைப்படி, இந்திய அளவில் பணிபுரியும் அரசு வாகன ஓட்டுனர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஓட்டுனர் பணியிடங்களை, தொழிற்நுட்ப பணியிடங்களாக உருவாக்கம் செய்து அறிவிக்க வேண்டும்.
அரசு வாகன ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு, ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு பதிலாக, புதிய வாகனங்களை வழங்க வேண்டும்.
ஓட்டுனர்கள் காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும்.
இவை உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

