ஒரு லட்சம் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்... தள்ளிப்போகும் என ஐகோர்ட்டில் அரசு தகவல்
ஒரு லட்சம் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்... தள்ளிப்போகும் என ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : டிச 22, 2024 09:02 AM
திருவண்ணாமலை மாவட்டம், விஸ்வந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவர் தாக்கல் செய்த மனு:
விஸ்வந்தாங்கல் கிராம பஞ்சாயத்து தேர்தல், 2019 டிசம்பரில் நடந்தது. தேர்வான நிர்வாகிகள், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். அவர்களின் பதவிக்காலம், 2025 ஜன., 5ல் முடிகிறது.
கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, ஆதிதிராவிட மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. பஞ்சாயத்து ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, மகளிர் மற்றும் பொது என்ற முறையில் ஒதுக்கப்பட்டது.
அரசு கெஜட்டில், கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாநகராட்சியின் கீழ், திருவண்ணாமலை நகராட்சியும், 18 கிராம பஞ்சாயத்துகளும் வருகின்றன. இவை, மாநகராட்சியின் கீழ் சேர்க்கப்பட்ட பின், பதவிகள் மற்றும் இடங்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு விட்டது; இடங்கள் ஒதுக்கீடு, வார்டுகள் மறுவரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை.
மறுவரையறை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், விஸ்வந்தாங்கல் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய வார்டு, மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஆதிதிராவிடருக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கும். அதனால், மறுவரையறை மற்றும் இடங்கள் ஒதுக்கீட்டு பணிகளை முடிக்கும்படி, அரசுக்கும், பஞ்சாயத்து ராஜ் இயக்குனருக்கும், கடந்த செப்டம்பரில் மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.
பஞ்சாயத்துகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடங்கள் ஒதுக்காமல், ஜனவரி முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு முயற்சிக்கிறது. திருவண்ணாமலை மாநகராட்சி உடன், பல கிராம பஞ்சாயத்துகளை இணைத்ததால், வார்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையும்.
எனவே, வார்டுகள் மறுவரையறை பணிகளையும், இடஒதுக்கீட்டையும் மேற்கொள்ளும் கடமை அரசுக்கு உள்ளது. வார்டுகள் மறுவரையறை பணிகளை முடிக்காமல், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட அனுமதித்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒதுக்கீடு உத்தரவாதம் என்பது கேலிக்கூத்தாகி விடும். எனவே, சட்ட நடைமுறையை பின்பற்றி, மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை பணிகளை முடிக்கவும், அதன்பின், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். அதன்பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகினர்.
'வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகளை பூர்த்தி செய்தபின், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தான், நியாயமான தேர்தலை நடத்துவதாக இருக்கும். எனவே அதுகுறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாது' என, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.