அரசு அலுவலக துாய்மைப்பணி மழைக்கு முன் துவங்க முடிவு
அரசு அலுவலக துாய்மைப்பணி மழைக்கு முன் துவங்க முடிவு
ADDED : ஆக 12, 2025 03:14 AM
சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அரசு அலுவலகங்களில் திடக்கழிவுகள் அகற்றும் பணிகளை, இரண்டு கட்டமாக மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுதும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில், திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு, 'துாய்மை மிஷன்' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் உருவாக்கப்பட்டு, மூலதன நிதியாக 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன் 5ம் தேதி, தலைமை செயலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உட்பட மாநிலம் முழுதும், 1,077 அரசு அலுவலகங்களில், துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தேவையற்ற பொருட்கள் விற்கப்பட்டன. இதன்வழியே, 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்க உள்ள நிலையில், அரசு அலுவலகங்களில், பழைய பொருட்களை மீண்டும் அகற்ற, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் முடிவெடுத்து உள்ளது. இரண்டு கட்டமாக, இப்பணிகள் நடக்க உள்ளன.