தர்ப்பூசணி பழங்களில் ரசாயனமில்லை; விளம்பரம் செய்ய அரசுக்கு உத்தரவு
தர்ப்பூசணி பழங்களில் ரசாயனமில்லை; விளம்பரம் செய்ய அரசுக்கு உத்தரவு
UPDATED : ஏப் 17, 2025 02:50 AM
ADDED : ஏப் 17, 2025 01:04 AM

சென்னை:'தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில், எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்கு, ஊசி வாயிலாக ரசாயனம் செலுத்தப்படுகிறது எனக்கூறி, பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செங்கல்பட்டு விவசாய நல சங்கத் தலைவர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'அதிகாரிகள் வேண்டுமென்றே பொது மக்களிடையே, தவறான தகவலை பரப்பியதால், தர்பூசணி விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தவறான தகவலை பரப்பிய, உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தர்பூசணி பழங்களை அரசே கொள்முதல் செய்து, அதற்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்' என்று, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'மாநிலத்தில் பல்வேறு இடங்களில், தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில், எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு கட்டும் வகையில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.