'மாஜி' செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு '7 நாளில் முடிவெடுக்கிறோம்' என்கிறது அரசு
'மாஜி' செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு '7 நாளில் முடிவெடுக்கிறோம்' என்கிறது அரசு
ADDED : ஜூலை 03, 2025 10:40 PM
சென்னை:'தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக, ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
தமிழகத்தில், 2021 - 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45,800 'டிரான்ஸ்பார்மர்' கொள்முதலுக்கு, 1,182.88 கோடி ரூபாய் மதிப்புக்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.
டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்களை லாபமடைய செய்ததன் வாயிலாக, அரசுக்கு, 397 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரிய தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக, முறைகேட்டில் சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் முடிவெடுக்க உள்ளதால், இந்த மனு செல்லாததாகி விட்டது,'' என்றார்.
அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி, ''புகாரளித்து இரு ஆண்டுகளாகி விட்டன. தகவல் உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து ஆவணங்களும் பெறப்பட்டு உள்ளன. விரிவான வாதங்களை முன்வைக்க, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.