ADDED : செப் 25, 2025 01:46 AM

சென்னை:தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலர் பீலா வெங்கடேசன், 56, உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார்.
தமிழக அரசின் முதன்மை செயலராக இருந்த பீலா வெங்கடேசன், 1997ம் ஆண்டு பீஹார் மாநில பிரிவில் இருந்து, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்ச்சி பெற்றார். அம்மாநில போஜ்பூர் மாவட்ட உதவி கலெக்டராக பணியை துவங்கிய அவர், திருமணத் திற்கு பின், தமிழ்நாடு மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக மாறினார்.
செங்கல்பட்டில் துணை கலெக்டராக பணி யாற்றினார். பின், சுகாதாரம், வணிக வரி, கைத்தறி துறைகளின் செயலராக பொறுப்பு வகித்தார்.
கொரோனா காலத்தில், 2020ல் மக்கள் நல்வாழ்வு துறை செயலராக பணியாற்றி, தினசரி கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டார். கடைசியாக, எரிசக்தி துறை முதன்மை செயலராக இருந்த அவர், மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ விடுப்பில் சென்றார்.
கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையிலும், வீட்டில் இருந்தபடியும் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை, தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
அவரது கணவர் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கியதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.
மறைந்த பீலாவின் தந்தை வெங்கடேசன், ஓய்வுபெற்ற டி.ஜி.பி., தாய் ராணி, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.
பீலா வெங்க டேசன் மறைவுக்கு, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.