கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்த அரசு டவுன் பஸ்: 15 பேர் காயம்
கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்த அரசு டவுன் பஸ்: 15 பேர் காயம்
ADDED : ஜூலை 20, 2024 04:19 PM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கிளை பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் காலாவதியானவையாக இருப்பதால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. நேற்று ஸ்டியரிங் லாக் ஆனதால் கரும்பு தோட்டத்தில் அரசு டவுன் பஸ் கவிழ்ந்து 15 பேர் காயமுற்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட கிளை பணிமனை திருப்புவனத்தில் 44 பஸ்களுடன் இயங்கி வருகிறது. ஆனால் 35 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள வேம்பத்துார், பச்சேரி, பழையனுார், ஏனாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தினமும் இரு முறை இப்பஸ்கள் சென்று வருகின்றன. இவற்றில் பல பஸ்கள் சரியான பராமரிப்பின்றி லொட லொட என ஆட்டம் காட்டுகின்றன. முகப்பு விளக்குகள், உட்புற விளக்குகள் சரியாக எரியாததால் இரவு பல பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
நேற்று காலை மதுரையில் இருந்து வேம்பத்துார் சென்ற அரசு டவுன் பஸ்(டி.என். 58 என் 1840) பச்சேரி அருகே ஸ்டியரிங் லாக் ஆகி திருப்ப முடியாமல் அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்தது. இதில் பயணித்த 15 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். பக்கத்து கிராமத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு திருப்புவனத்தில் இருந்து மதுரை சென்ற அரசு டவுன் பஸ்சில் (டி.என். 58 என் 0624) இருந்து பெண் பயணி இறங்கும் முன் டிரைவர் நகர்த்தியதால் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். டிரைவர், கண்டக்டர் என யாருமே கண்டு கொள்ளாமல் சென்றனர். அருகில் இருந்த மக்கள் அப்பெண்ணை மீட்டு முதலுதவி அளித்தனர்.
தொடர்ந்து பராமரிப்பன்றி பழுதான அரசு பஸ்களை இயக்குவதால் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அவலம் இருப்பதாக பயணிகள் புலம்புகின்றனர்.

