அதிகாரிகளின் கார்கள் டிச.,12ல் ஓடாது அரசு வாகன ஓட்டுநர்கள் முடிவு
அதிகாரிகளின் கார்கள் டிச.,12ல் ஓடாது அரசு வாகன ஓட்டுநர்கள் முடிவு
ADDED : நவ 17, 2025 01:39 AM
சென்னை: அதிகாரிகளின் கார் மற்றும் ஜீப்களை, டிசம்பர், 12ம் தேதி ஓட்டாமல், விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த, அரசு ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தலைமை செயலகம் துவங்கி, பல்வேறு துறைகளின் கடைநிலை அலுவலகங்கள் வரை, 10,000 கார்கள், ஜீப்கள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன.
இவற்றில், 8,000 வாகனங்கள் வரை பயன்படுத்தும் நிலையில் உள்ளன. அவற்றை, அரசு மற்றும் ஒப்பந்த ஓட்டுநர்கள் இயக்கி வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல, மற்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்படும் ஓட்டுநர்களுக்கு, மருத்துவ சான்று அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி வழங்க வேண்டும்.
சீருடை சலவை படியை, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். டிரைவர் லைசென்ஸ் புதுப்பிப்பு படியை, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாததால், டிசம்பர் 12ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த, தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அன்றைய தினம் விடுப்பு எடுத்து, அதிகாரிகளின் வாகனத்தை ஓட்டாமல் புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். சங்கத்தின் மாநில தலைவர் பச்சையப்பன், மாநில பொதுச்செயலர் குமார் தலைமையில் நேற்று, பெரம்பலுார் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

