ADDED : மார் 17, 2024 04:32 AM
சென்னை : ''பொன்முடி அமைச்சராக பதவியேற்க, எந்த தடையும் இல்லை,'' என, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை ஓட்டேரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
பா.ஜ., கட்சியில் பேச்சாளர்கள் யாருமே இல்லை. அதனால் தான், பிரதமரே தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறார்.
மோடியின் முகத்தில் தேர்தல் பயத்தை பார்க்கிறோம்; அவர் கண்களில் தேர்தல் பயம், தோல்வி பயம் வாட்டிக் கொண்டிருக்கிறது.
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு, உள்ளதையும் மோடி இழக்க போகிறார். வடமாநில மக்களின் அலை, மோடிக்கு எதிரான அலையாக உள்ளது.
விளக்கம் தருவோம்
ஒவ்வொன்றையும் நீதி துறையின் வாயிலாக கொண்டு வரக்கூடிய ஆற்றல், இந்திய மக்களுக்கு உண்டு, குறிப்பாக தமிழக மக்களுக்கு உண்டு.
பொன்முடி அமைச்சராக பதவியேற்க, எந்த தடையும் இல்லை; பதவி ஏற்பு தொடர்பாக விளக்கம் கேட்டால், சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.
கவர்னர் சென்னை திரும்பியதும் நடவடிக்கைகள் எடுக்கப் படும்.
விழா நடக்கும்
தேர்தல் தேதி அறிவித்த பின், பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கல் இல்லை என்று முன்பே தெரிவித்து விட்டோம்; எனவே, தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து விட்டு பதவி ஏற்பு விழா நடைபெறும்.
பல்கலை துணைவேந்தர்களுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம் என்ற நடைமுறை இருக்கும் நிலையில், கவர்னர் வரம்பு மீறி செயல்படுகிறார்; துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குகிறார்; கவர்னர் மாளிகையில் தனிராஜ்ஜியம் நடத்துகிறார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன், இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும்.
இவ்வாறு ரகுபதி பேசினார்.

