ADDED : மே 09, 2026 05:04 AM
சென்னை: தமிழகத்தில் நிர்வாக பணிகளை, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தொடங்கினார்.
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 8ம் தேதி அதாவது நேற்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டதால், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட அரசு நிர்வாக பணிகளில் தேக்கம் ஏற்பட்டது.
இதனால், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், நிர்வாக பணிகளை கவனிக்க தொடங்கினார். இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியிட அவர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு, தமிழக பள்ளிக்கல்வித் துறை மூத்த அதிகாரிகளுக்கு, கவர்னர் உத்தரவிட்டார். இதை ஏற்று, தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
புதிய கல்வி அமைச்சர் பதவியேற்கும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இருப்பது, மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை தாமதப்படுத்தும் என்பதால், தேர்வு முடிவுகளை தாமதமின்றி வெளியிடுவது அவசியம் என்பதை கவர்னர் உறுதிப்படுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
