அவையில் சொந்தக் கருத்தைக் கூற கவர்னருக்கு உரிமை இல்லை: அப்பாவு
அவையில் சொந்தக் கருத்தைக் கூற கவர்னருக்கு உரிமை இல்லை: அப்பாவு
ADDED : டிச 20, 2024 07:52 PM
சென்னை:''தமிழக சட்டசபையில், ஜன., 6ம் தேதி கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார். சட்டசபையில் உரையை வாசிக்க மட்டுமே, அவருக்கு உரிமை உண்டு; சொந்த கருத்தைக்கூற, உரிமை இல்லை,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, தமிழக சட்டசபை கூட்டத்தை, வரும் 6ம் தேதி, கவர்னர் கூட்டி உள்ளார். அன்று காலை காலை 9:30 மணிக்கு, கவர்னர் ரவி உரை நிகழ்த்த உள்ளார். சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூடி, சட்டசபை கூட்டத்தை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக. முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தால், விவாதம் செய்து நிறைவேற்ற, சட்டசபை தயாராக உள்ளது.
கடந்த முறை கவர்னர், தனது உரையின் முதல் மற்றும் கடைசி பக்கத்தை வாசித்தார். இந்த முறை முழு உரை வாசிப்பார் என நம்புகிறோம்.
கடந்த 2011 முதல் 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால கூட்டத் தொடர், இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, கூட்டம் குறைவான நாட்கள் நடத்தப்பட்டன.
வெள்ளம் போன்ற பாதிப்புகள் வரும்போது, அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால், சட்டசபை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த இயலவில்லை. சூழலுக்கு தகுந்தபடி சட்டசபை கூட்டம் நடத்தப்படும். ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்த வேண்டும் என்பது எண்ணம்.
மதுரை, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச, தேவையான நேரம் கொடுத்தோம். அரசு எதிர்க்கட்சியை மதிக்கிறது; பேச அனுமதி அளிக்கிறது. சட்டசபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை.
சட்டசபையில், கவர்னர் உரை நிகழ்த்த மட்டும் அனுமதி உள்ளது; கருத்து கூற அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 234 எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே, கருத்து கூற அனுமதி உண்டு.
பார்லிமென்டில் அமைச்சரவை கூடி, எழுதி கொடுக்கும் உரையை, ஜனாதிபதி முழுமையாக வாசிக்கிறார். அதன்படி சட்டசபையில், முதல்வர், அமைச்சரவை எழுதி கொடுக்கும் உரையை, கவர்னர் வாசிக்க வேண்டும். அதை வாசிக்கும் உரிமை மட்டும், அவருக்கு உண்டு; சொந்த கருத்தை கூற, அவருக்கு உரிமை இல்லை.
சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு உரிய மரியாதை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.