துணைவேந்தர்களுக்கு போலீஸ் மிரட்டல்: முதல்வர் மீது கவர்னர் ரவி குற்றச்சாட்டு
துணைவேந்தர்களுக்கு போலீஸ் மிரட்டல்: முதல்வர் மீது கவர்னர் ரவி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 26, 2025 01:26 AM
சென்னை: 'கவர்னரின் மாநாட்டில் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த, முதல்வரின் செயல் அவசர காலத்தை நினைவூட்டுகிறது' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு:
முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில், மாநில பல்கலைகளின் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல், முதல்வர் ஸ்டாலின், காவல் துறையை பயன்படுத்தி தடுத்த விதம், அவசர கால நாட்களை நினைவூட்டுகிறது.
விசாரணை
மாநில உயர்கல்வித்துறை அமைச்சர், மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என, துணை வேந்தர்களை தொலைபேசியில் மிரட்டிய நிலையில், அது பலன் அளிக்காததால், முதல்வர் ஸ்டாலின் காவல் துறையை பயன்படுத்திஉள்ளார்.
மாநாட்டு நாளில், ஒரு துணைவேந்தர் விசாரணைக்காக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மற்ற துணைவேந்தர்கள் தங்கிய ஊட்டி விடுதிகளின் அறைக்கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன.
துஷ்பிரயோகம்
அவர்களிடம், 'மாநாட்டில் பங்கேற்றால், உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும்; வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள்' என, காவல் துறையினரால் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர். இது, காவல் துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம். இங்கு காவல் துறையின் ராஜ்ஜியமா நடக்கிறது?
மாநிலத்தில், கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் இல்லையா அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்கு பெரிதும் உதவும் மாநில பல்கலைகளின் தரத்தை உயர்த்தினால், மாணவர்களிடம் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டும்.
அது, தன் அரசியல் எதிர்காலத்தை அச்சுறுத்தும் என, முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?
இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.