UPDATED : பிப் 13, 2024 01:52 AM
ADDED : பிப் 12, 2024 11:02 AM

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருப்பதால் இதனை புறக்கணிப்பதாக கூறி , வாசிக்காமல் 3 நிமிடத்திற்குள் முடித்து கொண்டார் கவர்னர் ரவி. இதனையடுத்து கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது கவலை அளிக்கிறது என்றார்.
உண்மைக்கு மாறான தகவல்
துவக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து
அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை துவக்கிய கவர்னர் ஆர்.என்.ரவி,
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே , சட்டசபை உறுப்பினர்களே, ஊடக நண்பர்களே , சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் ! என தமிழில் பேசி தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அவர் உரையாற்றுகையில், ''2024ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையை துவங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும்''
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து, என்ற திருக்குறளையும் வாசித்தார்.
''வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றி'' எனக்கூறி உரையை முடித்தார்.
சபாநாயகர் பதில்
''கவர்னர் அவர்கள் உரையை குறைவாக வாசித்தார்கள், அதனை நான் குறையாக கருதவில்லை. இந்த அரசு கருத்து , கொள்கை வேறுபாடு இருந்தாலும் மாண்போடு நடத்துவதுதான் எங்கள் வழக்கம். மழை நேரத்தில் நிதி தரவில்லை. ஆனால் பிரதமர் நிதியில் இருந்து அய்யா (கவர்னர்) வாங்கி தந்தால் நல்லாயிருக்குமே !'' என்று பேசினார்.
கடந்த ஆண்டு கூட்டம்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரியில், சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். கடந்த ஆண்டில் கவர்னர் ரவி உரையாற்றிய போது, அச்சிடப்பட்ட தன் உரையில், சில பகுதிகளை விடுத்தும், சிலவற்றை சேர்த்தும் பேசினார்.
இதை எதிர்பார்க்காத முதல்வர், அரசு அச்சிட்டு அளித்த உரையை மட்டும் சபையில் பதிவு செய்ய, சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த கவர்னர், சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனைத்தொடர்ந்து கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் தொடர்கிறது.
ஆனால், வழக்கம்போல சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கும் என, சபாநாயகர் அப்பாவு இம்மாதம் 1ம் தேதி அறிவித்தார். அதன்படி, நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் இன்று துவங்கியது.

