விடியல் பயணத்தை கேலிக்கூத்தாக்கிய அரசு பஸ்: கட்டணம் இல்லை; அபராதம் மட்டும் உண்டா?
விடியல் பயணத்தை கேலிக்கூத்தாக்கிய அரசு பஸ்: கட்டணம் இல்லை; அபராதம் மட்டும் உண்டா?
ADDED : அக் 30, 2024 07:45 AM

சென்னை: திருப்பூரில் இருந்து அரசு இலவச பஸ்சில் புளியம்பட்டி சென்ற பெண் பயணி, டிக்கெட் எடுக்கவில்லை என்று கூறி, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதாவது, கண்டக்டர்களிடம் டிக்கெட் மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும்; கட்டணம் கிடையாது என்ற நடைமுறை உள்ளது. இந்த நிலையில், அக்டோபர் 27ம் தேதி திருப்பூர் - புளியம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ், பல்லடம் நோக்கி வந்தது. தெற்குபாளையம் பிரிவில், ஒரு பெண் பஸ்சில் ஏறினார். அவர் டிக்கெட் வாங்கவில்லை.
பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது, அவர் டிக்கெட் வாங்காதது குறித்து, டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணிடம் கேட்டார். இதற்கு, 'ஆண்கள் பகுதியிலேயே நடத்துனர் இருந்ததால், டிக்கெட் எடுப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது' என்றார். ஏற்க மறுத்த பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித்தார். 'கையில் பணம் இல்லை' என அப்பெண் கூறியதை அடுத்து, நடத்துனரின் 'ஜி பே' எண்ணுக்கு தொகை அனுப்ப பரிசோதகர் கூறியுள்ளார். இதையடுத்து, 200 ரூபாயை அனுப்பிய அப்பெண், அங்கிருந்து சென்றார்.
ரூ.200 அபராதம்
டிக்கெட் பரிசோதகர் செந்தில்வேலனிடம் கேட்டதற்கு, ''பெண்களுக்கு இலவச பயணம் என்றாலும், டிக்கெட் வாங்க வேண்டியது அவசியம். டிக்கெட் வாங்காமல், மொபைல் போனில் அவர் 'பிஸி'யாக இருந்துள்ளார். பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது. ''பணத்தை 'ஜிபே' மூலம் நடத்துனருக்கு செலுத்திய அப்பெண், ரசீது பெறாமல் அங்கிருந்து கிளம்பினார். நடத்துனர் வசூலித்த, 200 ரூபாய் அபராதம் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. நடத்துனரிடம் அபராதம் வசூலித்ததற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
துரதிஷ்டவசமானது
இது குறித்து, அரசு போக்குவரத்து கழகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் பயணி ஒருவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணச்சீட்டு பெறாததால் ரூ. 200 அபராதம் விதித்தது துரதிஷ்டவசமானது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் அபராத தொகை பெற்றதும் அதற்கான உரிய ரசீது வழங்குவதற்குள் பயணி அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையான 200 ரூபாயை பயணியிடமே திருப்பி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

