சட்டவிரோத இறால் பண்ணைகளை உடனடியாக மூட அரசுக்கு உத்தரவு
சட்டவிரோத இறால் பண்ணைகளை உடனடியாக மூட அரசுக்கு உத்தரவு
ADDED : ஜன 30, 2024 01:54 AM

சென்னை: சட்டவிரோதமாக இயங்கும், 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதியின்றி இயங்கும் இறால் பண்ணைகளை மூடும்படி, திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர், 2018 அக்டோபரில் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், 'கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் வரும் இறால் பண்ணைகளை ஒழுங்குபடுத்த முடியும்; எங்கள் இறால் பண்ணைகள், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு அப்பால் வருகிறது. அதனால், அனுமதி பெற வேண்டியதில்லை' என, கூறப்பட்டது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், கூடுதல் பிளீடர் கிருஷ்ணராஜா ஆஜராகி, ''தமிழகத்தில் இயங்கும் 2,709 இறால் பண் ணைகளில், 2227 பதிவு செய்யப்பட்டுள்ளன; 348 பண்ணைகளுக்கு அனுமதி கோரப்பட்டு, பரிசீலனையில் உள்ளன. 134 பண்ணைகள், சட்டவிரோதமாக இயங்குகின்றன,'' என்றனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி யம் பிறப்பித்த உத்தரவு:
சுற்றுச்சூழலுக்கு இறால் பண்ணைகள் பாதிப்பை ஏற்படுத்துவதால், அனுமதி வழங்கும்போது உரிய சட்டங்களை ஆராய வேண்டும்; இறால் பண்ணைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மனுதாரர்கள், அனுமதியின்றி பண்ணைகளை நடத்துகின்றனர்.
எனவே, சட்டவிரோத இறால் பண்ணைகளுக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை மூடுவதற்கும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
சட்ட விதிகளை மீறி யாராவது இறால் பண்ணைகள் நடத்தினால், மூன்றாண்டு வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.
தமிழகத்தில், சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து இறால் பண்ணைகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறு வாரங்களில் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.