ஓய்வு எஸ்.ஐ.,க்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ஓய்வு எஸ்.ஐ.,க்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : டிச 03, 2024 02:15 AM
திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடந்த விபத்தில் காலை இழந்த ஓய்வு எஸ்.ஐ.,க்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்றம் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ராஜேந்திரன் 60. இவர் 2018ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். டூவீலரில் வாடிப்பட்டி சென்றபோது அரசு பஸ் மோதியது. இதில் ராஜேந்திரன் வலது கால் துண்டிக்கப்பட்டது.
இழப்பீடு கோரி அவர் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2022ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கவில்லை.
மீண்டும் ராஜேந்திரன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்கவும், இழப்பீடு வழங்காததற்காக அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.