ADDED : ஜன 31, 2024 01:28 AM
ராமநாதபுரம்:அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.,7ல் நடக்கிறது. இதிலாவது பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா என போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசு வேலைவழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் என ஜன., 9ல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பின், தொழிற் சங்க கூட்டமைப்புகளுடன் நடந்த பேச்சில் அரசு தரப்பில் பிப்.7க்கு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஓய்வு பெற்றோர் அமைப்பின் மண்டல செயலர் மணிக்கண்ணு கூறுகையில், ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிப்.,6ல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
அதில் ஏற்படும் முடிவுக்கேற்ப பிப்.,7ல் அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதிலாவது சுமுக தீர்வு ஏற்பட வேண்டும்' என்றார்.