கடலோர ஒழுங்குமுறை விதிகளை நீர்த்துப்போக செய்ததாக குற்றச்சாட்டு: மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
கடலோர ஒழுங்குமுறை விதிகளை நீர்த்துப்போக செய்ததாக குற்றச்சாட்டு: மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
ADDED : டிச 16, 2025 05:23 AM

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை விதிகளை நீர்த்துப்போகச் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சரவணன் தாக்கல் செய்த மனு: கடலோர ஒழுங்குமுறை மண்டலமான சி.ஆர்.இசட்., 2011ல் வெளியிட்ட அறிவிக்கை மற்றும் ஐ.பி.இசட்., எனப்படும் தீவு பாதுகாப்பு மண்டல அறிவிக்கையின்படி, அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறை என்ற தலைப்பில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குறிப்பாணை வெளியிட்டது.
அதில், 'சி.ஆர்.இசட்., அறிவிக்கையில் வெளிப்படையாக குறிப்பிடப்படாத அல்லது அனுமதிக்கப்படாத ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்க விரும்பினால், கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் விரிவான விளக்கங்களுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பலாம்' என, கூறப்பட்டுள்ளது.
சி.ஆர்.இசட்., அறிவிக்கை பிரிவு 8ல், அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
எனவே, இதை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த விதிமீறலைத் தடுக்க, தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தேசிய தலைவர் பிரகாஷ் ஸ்ரீவத்சவா, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், சி.ஆர்.இசட்., அறிவிப்பாணையை நீர்த்துப்போகச் செய்ததாக, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

