புதிய கண்டுபிடிப்புகளால் வளர்ச்சி: சோம்நாத் பேச்சு
புதிய கண்டுபிடிப்புகளால் வளர்ச்சி: சோம்நாத் பேச்சு
UPDATED : மார் 10, 2024 02:38 AM
ADDED : மார் 10, 2024 02:01 AM

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலையில் நடந்த, 37வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:
கடந்த, 60 ஆண்டுகளில் சிறிய ராக்கெட் முதல் இந்தியாவிலேயே தயாரித்து விண்ணுக்கு ஏவுகணை அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது தான் வளர்ந்து வருகிறோம்.
விண்வெளி ஆய்வை கடந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், 'டிவி' ஏ.டி.எம்., கடல்சார் கண்டு பிடிப்புகள், வேளாண் பயன்பாடுகளுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சந்திரயான் - 2ல் ஏற்பட்ட தோல்வியில் கற்ற பாடத்தின் அடிப்படையில், தற்போது வென்று உள்ளோம். நிலவுக்கும், பூமிக்கும் உள்ள தரைதளம் வெவ்வேறானது. ஆனால், தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்திய பொறியாளர்களின் சாதுர்யத்தால், நான்கு ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பின், தற்போது நிலவில் இறக்கி உள்ளோம்.
புதிய கண்டுபிடிப்புகளால் தான் வளர்ச்சியை எட்ட முடியும். சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

