கைகொடுத்தது தென்மேற்கு பருவமழை; நீர் மின் உற்பத்தி 260 கோடி யூனிட்டாக உயர்வு
கைகொடுத்தது தென்மேற்கு பருவமழை; நீர் மின் உற்பத்தி 260 கோடி யூனிட்டாக உயர்வு
ADDED : அக் 26, 2024 04:46 AM

சென்னை : நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை நன்கு பெய்ததால், ஏப்ரல் முதல் கடந்த 20ம் தேதி வரை, நீர் மின் நிலையங்களில், 260 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 215 கோடி யூனிட்களாக இருந்தது.
தண்ணீர் தேக்கப்படும்
நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில், மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் அருகில் உள்ள அணைகளில், மழை காலத்தில் தண்ணீர் தேக்கப்படுகிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு யூனிட் உற்பத்தி செலவு, 75 காசுக்கு கீழ் உள்ளதால் காலை, மாலை மின் தேவையை சமாளிக்க, நீர் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
போதிய மழை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், நீர் மின் நிலையங்களில் தினமும் சராசரியாக, ஒரு கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மத்திய மின்சார ஆணையம், 2023 - 24ல், தமிழக நீர் மின் நிலையங்களில், 422 கோடி யூனிட் நீர் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது.
அந்தாண்டில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால், தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.
இதனால், இலக்கை விட குறைவாக, 370 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை நன்கு இருந்ததால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது. எனவே, நீர் மின் நிலையங்களில் உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது.
நம்பிக்கை
கடந்த ஏப்ரல் முதல் இம்மாதம், 20ம் தேதி வரை நீர் மின் நிலையங்களில், 260 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 215 கோடி யூனிட்களாக இருந்தது.
நல்ல மழை பொழிவால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டில் கூடுதலாக, 45 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்துள்ள, 400 கோடி யூனிட் என்ற இலக்கையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், மின் வாரியம் உள்ளது.