ADDED : பிப் 06, 2026 03:05 AM

சென்னை: தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 65 ஆண்டுகளுக்கு மேலாக கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 10 நபர்களுக்கு, தலா எட்டு கிராம் தங்கப் பதக்கம் மற்றும், 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருது; 10 கைவினை கலைஞர்களுக்கு தலா நான்கு கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பூம்புகார் மாநில விருது ஆகியவற்றை, முதல்வர் வழங்கினார்.
சேலம் பஞ்சலோக சிலைகள், தம்மாம்பட்டி மரச்சிற்பங்கள், தஞ்சை கலைத் தட்டுகள், வீணைகள், மதுரை பித்தளை கலை பொருட்கள், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருநை ஜாடி மாதிரிகள் மற்றும் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், 20க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
வரும் 8ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, தினசரி காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம்.

