அரசு துறைகளில் பிரச்னையா? 'வாட்ஸாப்'பில் புகார் அளிக்கலாம்!
அரசு துறைகளில் பிரச்னையா? 'வாட்ஸாப்'பில் புகார் அளிக்கலாம்!
ADDED : ஆக 16, 2025 01:32 AM
சென்னை:தமிழக அரசின் சேவைகள் மற்றும் புகார்களை, 'வாட்ஸாப்' வாயிலாக, மக்கள் பெறும் வகையில், தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக அரசின், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், மக்கள் இணைய வழியில் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.
தற்போது மக்கள், துறை ரீதியான புகார்களைப் பதிவு செய்ய, அந்தந்த துறைகளின் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக, அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில், 'சாட்பாட்' என்ற சேவையை, தமிழக அரசு விரைவில் வழங்க உள்ளது.
' இதன் வாயிலாக, மக்கள் எளிமையாக சேவைகளை பெறுவதுடன், புகார் அளிக்கவும் முடியும். முதற்கட்டமாக அரசின், 50 சேவைகள் இதில் இடம்பெற உள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில் நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், மெட்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தக இயக்குநர் ரவி கார்க், அரசு மின்னாளுமை முகமை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.