பாலியல் வழக்கில் பாதித்த பெண்ணின் வீடியோவை பார்த்த ஆண் போலீசார்: ஐகோர்ட் கண்டனம்
பாலியல் வழக்கில் பாதித்த பெண்ணின் வீடியோவை பார்த்த ஆண் போலீசார்: ஐகோர்ட் கண்டனம்
UPDATED : ஜூலை 16, 2025 03:51 AM
ADDED : ஜூலை 15, 2025 11:51 PM

சென்னை:பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில், அவரது தனிப்பட்ட வீடியோக்களை, ஆண் போலீசார் பார்த்து விசாரணை நடத்தியதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இணையதளங்களில் பகிரப்பட்ட, தனிப்பட்ட வீடியோக்களை அகற்றக்கோரி, பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் குமரகுரு ஆஜராகி, அந்த வீடியோ இடம் பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆனால், 39 இணையதளங்களில் வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும், மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் வலியுறுத்தினார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இணையதளங்களில் பகிரப்பட்ட தனிப்பட்ட வீடியோக்களை அகற்ற, எங்கு புகார் அளிக்க வேண்டும்; புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவாக, மத்திய அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயரை, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காக, சம்பந்தப்பட்ட வீடியோவை அப்பெண் முன்னிலையில், ஏழு ஆண் போலீசார் பார்த்து விசாரணை நடத்தியது கண்டனத்திற்குரியது.
போலீசாரின் இச்செயல் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற வழக்குகளில், விசாரணைக்கு பெண் போலீஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும்.
இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை உடனடியாக போலீசார் நீக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை, வரும் 22க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.