ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 07, 2025 06:41 AM
சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.
அரசியல் செல்வாக்கு
இவர் வாயிலாக, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம், அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி, பல்வேறு தவணைகளில் 30 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.
ஆனால், உறுதி அளித்தபடி வேலை பெற்று தரவில்லை. இது குறித்து ரவீந்திரன், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2021 முதல் நிலுவையில் உள்ள வழக்கில், விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், 'குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர். அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக, இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதோடு, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.
நேரமில்லை
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், 'முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர, அரசிடம் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், அந்த உத்தரவை ரத்து செய்தும், மாநில போலீசாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லாததால், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.